நல்ல பரோட்டா சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. கடைசியாக சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் சுவைத்தது. நண்பர் ஒருவர் சிதம்பரம் மூர்த்தி காஃபே சென்னை அண்ணா நகரில் புதிய கிளை திறந்திருப்பதாகவும் சில நண்பர்களுடன் விருந்தளிக்க அழைத்திருந்தார்.
அண்ணா நகரில் ஆறாவது அவனியூவில் உள்ள குளுரூட்டப்பட்ட உணவகத்தில் மதிய வேளையில் நல்ல பசியுடன் நாங்கள் நுழைந்தோம். சனிக்கிழமையாக இருந்தாலும் உடனே அமர இடமும் கிடைத்தது.
மூர்த்தி காஃபேயில் கிடைக்கும் பரோட்டாவும் முட்டை சட்னியும் சிதம்பரம் பகுதியில் வெகு பிரபலம். அதனால் ஆளுக்கு ஒரு ஸ்பெஷல் பரோட்டாவும்(30₹) அனைவருக்கும் சேர்த்து ஒரு முட்டை சட்னியும்(120₹) ஆர்டர் செய்தோம். அதற்கு முன் ஒன் பை டூ மான்சோ சிக்கன் சூப்பும் ஹாட் அன்டு சவர் சிக்கன் சூப்பும் (90₹) வரவழைத்தோம்.
நண்பர் பெப்பர் பார்பகூ சிக்கன் ஹாப்(230₹) சொல்ல போட்டிக்கு நான் அரை சிக்கன் 88(200₹) சொல்ல, ஜெயித்ததென்னவோ அவர் தான். சிக்கன் 88யை தாறுமாறாக எண்ணையில் பொரிக்கப்பட்டு சிக்கன் சுவையே தெரியலை, கிட்டத்தட்ட வத்தல் மாதிரி இருந்தது. ஆனால் பெப்பர் பார்பகூ அருமை, அதிலும் மாயோவுடன் சாப்பிட வேற லெவல்.
சூப் ரெண்டுமே மோசமில்லை. இரண்டாக ஷேர் செய்திருந்தாலும் அளவு அதிகம். பரோட்டா பெரிதாக, செம சாஃப்ட். அது கூட சால்னாவும் தந்தார்கள். ஜெனரலா இந்த மாதிரி உணவகங்களில் தொட்டுக்க சால்னா (கேட்டாலும்) தரமாட்டார்கள். இங்கு கேட்காமலே கிடைத்தது, கூட ஒரு காரமான சிக்கன் க்ரேவியும் இலவசமாக வந்தது. முட்டை சட்னி ஆகா ஓகாவென்று இல்லை மிகுந்த ஏமாற்றம்.
கடைசியாக ஒரு முட்டை பிரியாணி வந்தது. உடன் வெங்காய பச்சடியும் கத்தரிக்காய் தொக்கும் வர, பிரியாணியுடன் அன்றைய கடமையை முடித்துக் கொண்டேன். பிரியாணி சூப்பர் என்று சொல்ல முடியாது, ஆனால் மோசமில்லை. நல்ல பசியுடன் வந்தால் கண்டிப்பாக ஏமாற்றம் அளிக்காது.
பில்லில் சர்வீஸ் சார்ஜ் இல்லை, வரி மட்டுமே. நான்கு பேருக்கு 1024₹ பரவாயில்லை. சர்வீஸ் மோசமில்லை, தண்ணீர்தான் நேரத்தில் வரவில்லை. உணவு பரிமாறிய வாங் சூவிற்கு நன்றி. பயபுள்ளை கொஞ்சம் தமிழ் பேசுனால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.
மொத்தத்தில் சிக்கன் 88, முட்டை சட்னி தவிர மற்றவை நன்றாகவே இருந்தது. கண்டிப்பாக பரோட்டாவுக்காக திரும்ப வரணும்.










