இந்த முறை ஊருக்கு வந்தபோது மெஸ்ஸுக்கு பதிலாக என் மச்சானின் பரிந்துரையின் பேரில் தமிழ் சங்கம் சாலையில் உள்ள ஹோட்டல் ஜானகிராம் சென்றேன். கூட்டம் மிகுந்த சாலை என்பதால் காரில் செல்வதை விட பைக்கில் செல்வதே உகந்தது.
வெயில் அதிகமாக இருந்ததால் மாடியில் உள்ள குளிரூட்டப்பட்ட பகுதியில் சென்று அமர்ந்தோம். நமக்கு மட்டன் பிரியாணியும் மச்சானுக்கு மட்டன் சாப்பாடும் கொண்டுவர சொன்னோம்.
இங்கு சைவம் மட்டும் சாப்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆக முடியாது, ஏனெனில் இங்கு சைவம் கிடையாது. அதாவது சாப்பாடு கூட நெய் மீன்/அயிர மீன் கொழம்பு, மட்டன்/சிக்கன் சுக்கா என்று ஏதாவது வாங்க வேண்டும். இருவருக்கும் வாழை இழை விரித்து வெங்காய பச்சடி வைத்தனர் முதலில்.
பின்னர் மச்சானுக்கு ஒரு குவழையில் மட்டன் கொழம்பு வந்தது. பின்னர் பட்டாணி சுண்டலும் வெண்டைக்காய் பச்சடியும் வந்தது. சர்வர் அதை நமக்கு வைக்க முயற்சிக்க, தம்பி நான் சுத்த அசைவம் என்று பயத்தில் கத்த வேண்டியதாகிவிட்டது.
சாப்பாட்டிற்கு சிக்கன், மட்டன், மீன் கொழம்பு என பல வெரைட்டிகள். அப்புறம் ரசமும் மோரும் கிடைத்தது. பிறகு சுடச்சுட சீரகசம்பா அரிசியில் செய்த மட்டன் பிரியாணி வந்தது. மட்டன் பிரியாணியில் முட்டை தேவையா என்ற கேள்விக்கு பட்டிமன்றமே வைக்கலாம். ஏன்தான் முட்டை வைத்தார்கள் என்று தெரியவில்லை, அதற்கு பதில் இரண்டு பீஸை வச்சிருக்கலாம். சரி விடுடா சூணா பாணானு ஒரு ஐந்து நிமிட இடைவெளியில் இழையில் ஒரு பருக்கை அரிசி இருந்த தடயம் கூட தெரியாமல் ஆக்கப்பட்டது. சும்மா சொல்லக்கூடாது மதுரையில் மட்டும் எப்படிதான் இப்படி சுவை வருமோ. பிரியாணி சாப்பிட்ட பிறகு சாதமும் (ரசம் மற்றும் தயிருடன்) பறிமாறப்படும். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.
திடீரென்று பின்னாடி இருந்தவர்கள் நெய் மீன் சொல்ல, நாடி நரம்புகள் முறுக்கேறி நாமும் நெய் மீன் வறுவல்(150₹) ஒன்று வரவழைத்தோம். அடுப்பில் இருந்து நேராக நம்ம கிட்ட வந்துடுச்சு போல freshness at the best.
பிரியாணி விலை இருநூறு. பார்ஸல் வாங்குன போது 170₹ தான். மட்டன் சாப்பாடு 240₹. விலை அதிகமென்று நினைத்தால் குளிரூட்டப்படாத தரை தளத்தில் உணவருந்தலாம். அங்கு விலை கொஞ்சம் மலிவு. ஹோட்டலை விட்டு வெளிவந்தால் எதிரில் அமைந்திருக்கும் இளநீர் சர்பத் கடையில் ஒரு கட்டு கட்டிட்டு வீட்டிற்கு போகலாம் இல்லை இங்கேயே ஜிகர்தண்டா அருந்தலாம்.
மதுரைக்கு வந்தால் over hype உள்ள மெஸ்களை புறம் தள்ளி தைரியமாக ஜானகிராம் வந்து உணவருந்தலாம்.
கூகிலாண்டவர் வழிகாட்டி:










No comments:
Post a Comment