Tuesday, August 13, 2019

மயிலை பாரதி மெஸ்

ஞாயிறு காலை வேளை மயிலை கற்பகாம்பாள் மற்றும் கபாலீஸ்வரர் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு பசியுடன் பொன்னம்பல வாத்தியார் தெருவில் நல்ல உணவகம் நோக்கிய தேடல். ஜன்னல் கடைக்கு முன்பாக நின்றேன். ஆனால் குழந்தையுடன் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பதால் எதிரில் அமைந்துள்ள பாரதி மெஸிற்குள் சென்றோம்.



பல வருடங்களுக்கு முன் திருவள்ளிக்கேணி பாரதி மெஸ்ஸில் நண்பர் மோகனுடன் அடிக்கடி உணவருந்துவது உண்டு. வயிற்றுக்கு எந்த பாதகமும் செய்யாத உணவு. உணவகத்தின் உரிமையாளர் மகாகவி பாரதியாரின் பக்தர். உணவகம் முழுவதும் பாரதியின் புகைப்படங்கள் மற்றும் அவரைப் பற்றிய குறிப்புகள்.



இட்லி ரெடியாக நேரமாகும் என்பதால் பொங்கல்(40₹), சிறுகீரை தோசை(38₹) மற்றும் மெது வடை(15₹) வரவழைத்தோம். சாம்பாரும் மூன்று வகையான சட்னியும் (தேங்காய், தக்காளி, புதினா) ஒவ்வொரு டேபிளிலும் வைக்கப்பட்டிருந்தது. குறை என்று சொல்ல ஒன்றும் இல்லை. அனைத்துமே அருமை.




முன் வந்த பொங்கலையும் தோசையையும் சாப்பிட்டு முடிக்கவும் தட்டு இட்லி(45₹) ரெடியாகவும் நேரம் சரியாக இருந்தது. சரி அதை மட்டும் ஏன் விட்டு வைக்கணும் என்று ஒரு ப்ளேட் சொன்னேன். அகலமான இட்லி சிறு ப்ளேட்டில் வைத்து அதன் மேல் இட்லி பொடி தூவி நெய் விட்டு ஆவி பறக்க வந்தது. ஒரு விள்ளல் எடுத்து புதினா தேங்காய் சட்னியுடன் சாப்பிட வழுக்கிக்கொண்டு உள் சென்றது. நல்ல நெய் வாசம். சில நிமிடங்களில் இட்லி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.



கடைசியாக சுமிதி பால்(18₹) வந்தது. சுக்கு, மிளகு, திப்பிலி கலந்த சூடான பால் சுவைக்க அப்படியே வீட்டில் சுவைத்த மணம். அனைத்தும் சேர்ந்து மொத்தம் நூற்றி எழபத்தைந்து ரூபாய் மூவருக்குமான காலை உணவு. விலை அதிகமில்லை. மதியம் வந்தால் காய்கறி சாதம் சாப்பிட்டு பாருங்க. அத்துடன் மயிலை பயணத்தை முடித்து கொண்டோம்.

 

No comments:

Post a Comment