Tuesday, March 27, 2018

திண்டுக்கல் பிரியாணி at திருச்சி


திருச்சி ஐங்ஷனுக்கு பக்கத்துல இருக்கும் "திண்டுக்கல் பிரியாணி" கடை ஒரு ரோட்டோரக்கடை. ஆனால் இங்கு கிடைக்கும் சீரக சம்பா அரிசியில் செய்த மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணிக்கு பெரும் கூட்டமே மதிய வேலையில் வரும்.






இன்று குருவாயூரை பிடிக்கும் முன் சிக்கன் பிரியாணி பார்ஸல் (90₹) வாங்கினோம். உடன் தயிர் கம்மியான வெங்காய பச்சதியும் தால்ச்சாவும் தரப்பட்டது. பிரியாணி சுவையில் திண்டுக்கல் வேனு மற்றும் தலைப்பாகட்டி தரத்தில் இருந்தது. ஆனால் அளவில் அதிகம். என்ன ப்ளாஸ்டிக் கவருக்கு பதில் வாழை இலையில் பேக் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சிக்கன் 65 மட்டும் வாங்கிவிட கூடாது, செயற்கை நிறக்கலப்பு அதிகம்.


கூகிள் வரைபடம்:

திருச்சி நியூ குறிஞ்சி உணவகம்

ஏற்கனவே இவ்வுணவகத்தை பற்றி எழுதியுள்ளேன். ஆனால் இன்று உண்ட காலை உணவு மறுபடியும் எழுதத்தூண்டியது.


உடன் வந்த மற்றவர்கள் அனைவரும் காம்பிளிமன்டரி பிரேக்பாஸ்ட் சாப்பிட, எனக்கு மட்டும் ஒரு பொங்கல்(45) வடை(13) ஆர்டர் செய்தேன்.
அவர் அறுபதை கடந்த நபர் போலிருந்தார். ஆனால் சுறுசுறுப்பில் இளைஞர். ஒரு பொங்கல் வடையை வச்சிட்டு இரண்டு வகை சட்னி, எள்ளு பொடி, சாம்பார், கடலைக்கறி மற்றும் கத்தரிக்காயில் செய்த ஒரு வித கொழம்பு என வச்சு தள்ளிட்டார். சுவை வழமைபோல அபாரம். வடை சிறியதாக இருந்தாலும் அந்த விலைக்கு அது வொர்த்து. பொங்கள் என் ஒருவனுக்கு அதிகமான அளவே.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்தால் சஞ்கீதா செல்வதை விட இங்கு வந்து பாருங்கள். பர்சுக்கு பங்கம் வைக்காத ஓர் சைவ உணவகம்.

கூகிள் வரைபடம்:

ஹோட்டல் கண்ணப்பா


ஒரு திருமணத்திற்காக திருச்சி வர நேரிட்டது. நேற்று முழுவதும் கோவில் கோவிலா சுத்துனதுல சரியா சாப்பிட்டமுடியவில்லை. இன்று காலை ஓலா ரெண்டல் ஸைலோ புக் செய்து உத்தமர் கோவிலில் ஆரம்பித்து சமயபுரம் மாரியம்மன் வரை தரிசித்து கடைசியாக மதிய உணவிற்காக மன்னர்புரத்தில் உள்ள ஹோட்டல் கண்ணப்பா வந்தடைந்தோம்.



ஸ்டார்டருக்கு ஒரு ஒன் பை டூ பெப்பர் சிக்கன் சூப்பும்(75₹) சிக்கன் கபாப்(180₹), பிஷ் பிங்கர்ஸ்(200₹) மற்றும் பார்பகூ பிஷ்(220₹). சூப் சொல்லிக்கற மாதிரி இல்லை. ஆர்டர் செய்யாமலே இருந்திருக்கலாம். சிக்கன் கபாப் தந்தூரியில் சமைத்தது, நன்றாகவே இருந்தது. பிஷ் பிங்கர்ஸும் பார்பகூ இரண்டுமே செம. விலையும் அதிகமில்லை. குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்டார்டர்ஸ்.





மெயின் டிஷ்ஷாக இரண்டு வகையான மட்டன் பிறியாணி...சீரக சம்பா(180₹) மற்றும் பாஸ்மதி(190₹) அரிசியால் செய்யப்பட்டது. உடன் கத்தரிக்காய் தால்சாவும் தயிர் பச்சதி. பீஸ் ஒவ்வொன்றும் நன்றாக இருந்தது. பிறியாணி மிக சிறப்பென்று சொல்ல இயலாது. ஆனால் மற்றவர்கள் விரும்பி உண்டனர். ஜுனியர் குப்பண்ணாவிலும் தலைப்பாகத்தியிலும் சாப்பிட்டு என் நாக்குதான் மறத்து விட்டடோ என்னவோ.







இதைவிட திருச்சி ஜங்குசன் பக்கத்தில் இருக்கும் திண்டுக்கல் பிறியாணி(சாலையோர உணவகம்) நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டேன். ஆனால் குடும்பமாக ஊருக்கு உள் நுழையாமல் செல்ல திருச்சி பைபாஸில் அமைந்திருக்கும் கண்ணப்பா ஓர் சிறந்த உணவகமே. டவுன் உள்ள போனால் பனானா லீப் இதைவிட அருமையாக இருக்கும்.

கூகிள் வரைபடம்:

 

மாலை டிபன் at நியூ குறிஞ்சி உணவகம்


 

மாலையில் நாங்கள் தங்கியிருக்கும் குரு விடுதியில் இருந்து வெளியே செல்வதற்கு முன்பு விடுதி அமைந்துள்ள கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள குறிஞ்சி உணவகத்திற்கு செல்வதாக முடிவாகியது.


என்ன வேண்டும் என கேட்பதற்கு முன்னரே வாழை இலை வைத்தார் சர்வர். மினி வடைகளும் (20₹) இனிப்பு பனியாரமும் (35₹) முதலில் ஆர்டர் செய்தோம்.
சிறு வடைகள் சென்னையில் கிடைக்கும் மைசூர் போண்டாவின் மினி வெர்சன். ஒரு பிளேட்டில் பத்து வடைகள். அதனுடன் மூன்று வதமான சட்னிகளும் சிறு சட்டியில் சாம்பாரும் பறிமாறப்பட்டது. வடையை ஒரு விள்ளல் எடுத்து சாம்பாரில் ஒரு முக்கு முக்கி சட்னி தொட்டு சாப்பிட்டால் அட்டகாசமான சுவை. இனிப்பு பனியாரம் மிதமான இனிப்புடன் நன்றாகவே இருந்தது. ஆனால் இரண்டிற்கு மேல் சாப்பிட முடியவில்லை.




கடைசியில் வரப்பட்ட பில்டர் காபி(22₹) சிறு கசப்புடன் அருமை. இதற்கு முன்பு இப்பகுதியில் அதிக முறை சங்கீதா உணவகத்தற்கு தான் சென்றிருந்தோம். மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்திருந்தாலும் நாங்கள் இந்த ட்ரிப்பில் தான் இங்கு உணவருந்த வாய்ப்பு கிடைத்தது.




உணவு பொருட்களின் விலையை பொருத்தவரை திருச்சி எப்போதுமே சென்னைவாசிகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை தரும். இம்முறையும் அவ்வாறே நிகழ்ந்தது.

கூகிள் வரைபடம்:

 

பூர்வீக மயில் மார்க் மிட்டாய் கடை



தொதல் அல்வா கேள்வி பட்டிருக்கீங்களா? நேற்றிரவு தான் முதன் முதலில் சுவைக்க நேர்ந்தது.

நேற்று இரவு மைத்துனருடன் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி சந்திப்பு வரை ஒரு நடை. சந்திப்பு செல்லும்முன் மயில் மார்க் மிட்டாய் கடையில் நண்பனுக்காக இனிப்பு பலகாரங்கள் வாங்க சென்றோம்.





அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பலகாரங்களில் இருவகையான அல்வா. தொதல் மற்றும் பருத்தி அல்வா. இரு வகைகளும் கிலோ முன்னூறு ரூவா. தொதல் என்பது இலங்கையில் இருந்து வந்த முஸ்லிம் இன மக்கள் மூலமாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை என்னும் ஊரில் பிரசித்தம். இது கருப்பட்டி, தேங்காய் பால் மற்றும் ஜவ்வரிசி கொண்டு செய்யப்படும்.





பருத்தி அல்வா என்பது பருத்தி பால் மற்றும் கருப்பட்டி கொண்டு செய்யப்படுவது. தொதல் நம்ம திருநெல்வேலி அல்வா போன்ற அமைப்பிலும் பருத்தி அல்வா சற்று திடமாகவும் இருந்தன. திருச்சி வந்தால் தவறாமல் செல்ல வேண்டிய கடை "பூர்வீக மயில் மார்க் மிட்டாய் கடை".

கூகிள் வரைபடம்:

Friday, March 9, 2018

பாரடைஸ் பிரியாணி

நண்பனின் அழைப்பின் பேரில் மதிய உணவிற்காக போரூரில் புதிதாக திறக்கப்பட்ட ஹைதராபாதி பிரியாணிக்கு பிரசத்தி பெற்ற பாரடைஸ் உணவகத்திற்கு செல்ல நேரிட்டது.



முதல் மாடியில் உணவகமும் தரை தளத்தில் பார்சலும் கிடைக்குமாறு அமைத்திருந்தனர். நாங்கள் டோக்கன் வாங்கி கொண்டு அரை மணி நேர காத்திருத்தலுக்கு பிறகு உள் அழைக்கப்பட்டோம். சென்னையில் டோக்கன் வாங்கி நான் உணவருந்திய ஒரே உணவகம் இது மட்டுமே. 


ஆரம்ப உணவாக அரை ப்ளேட் ரேஷ்மி கபாப்(160₹) மற்றும் முக்கிய உணவாக ஒரு முழு மட்டன் பிரியாணியும்(315₹) ஆர்டர் செய்தோம். மறுபடியும் அரை மணி நேர காத்திருப்பு. முதலில் வந்த சிக்கன் கபாப் பார்த்தவுடன் பெரும் ஏமாற்றம். வெறும் நான்கு சிறிய துண்டுகள். ஆனால் சாப்பிட்ட பிறகு பரம திருப்தி. மிக மிருதுவான சிக்கன் பீஸ்கள்...குங்குமப்பூ நீரில் மேரினேட் செய்து அருமையாக செய்திருந்தார்கள். 



அடுத்து ஒரு முர்க் சர்பியா காளிமிச்சி(187₹)....தமிழில் சொல்லனும்னா ஏலக்காய் மற்றும் சிகப்பு மிளகாய் கலந்த தந்தூரி அடுப்பில் சுட்டெக்கப்பட்ட காரமில்லாத இரு சிக்கன் லெக் பீஸ்கள். சொர்கம்னா என்னன்னு எனக்கு உணர்த்தியது.





கடைசியாக மெயின் டிஷ்ஷான முழு மட்டன் பிரியாணி வந்தது. மசாலா சற்று அதிகம், ஆனால் ஒவ்வொரு மட்டன் பீஸும் ரிச்சான நறுமணத்தோடு (ரோஸ் வாட்டர் ?) அருமையான சுவையோடு இருந்தது.




பசி அடங்காதாலால் கடைசியாக ஒரு சிங்கிள் மட்டன பிரியாணி(192₹) ஆர்டர் செய்ய வேண்டியதாகிவிட்டது. பிரியாணியுடன் மசாலா மோரும் வெங்காய ஸ்லைஸும் கிரேவியும் கிடைத்து. அந்த மோரை கடைசியில் குடிக்க குடிக்க ஆனந்தம்.



சென்னை மக்களுக்கு இந்த வகை பிரியாணி பிடிக்குமா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு முறையேனும் செல்லலாம்.

கூகிள் வரைபடம்:

Saturday, March 3, 2018

பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்

இன்று பால்ய நண்பனோடு தியகராயநகரில் குறு உலாத்தல். மதிய வேலையாகிவிட்டதால் எங்கு சாப்பிடலாமென கேட்டான். நான் கூட்டிசென்ற இடம் பார்த்து பய மிரண்டே விட்டான்.


பிக் பஜார் பக்கத்தில் உள்ள சிங்கார வேலன் தெருவில் புதிதாக திறக்கப்பட்ட பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் தான் நாங்கள் சென்ற இடம். இங்கு ஸ்பாசாலிட்டியே சாப்பாட்டுடன் பறிமாரப்படும் வித விதமான தொக்கு மற்றும் கொழம்பு வகைகள்.





இருவருக்கும் மீன் வருவல் சாப்பாடு (299₹), கரண்டி ஆம்ளெட்(60₹) மற்றும் கோழிக்கறி ஆம்ளெட்(150₹) ஆர்டர் செய்தோம். முதலில் வாழை இழை வைத்து கத்திரிக்காய் பொரியல், புடலங்காய் கூட்டு, நெத்திலி கருவாடு தொக்கு, சில சிறு வெங்காயம் மற்றும் அரை லிட்டர் பிஸ்லரி வாட்டர் பாட்டில் பறிமாரப்பட்டது. பிறகு சிறிதளவு சாதம் வைத்து சிக்கன் தொக்கு வைத்தார்கள்.




முதலில் சாதத்தின் அளவை பார்த்து நண்பன் கிண்டல் செய்தான். ஆனால் அதன்பிறகு காடை தொக்கு, இரால் தொக்கு, நண்டு தொக்கு, மட்டன் கொழம்பு, எலும்பு கொழம்பு, நாட்டு கோழிக் கொழம்பு என்று வரிசையாக சாதத்துடன் வைக்கப்பட பயபுள்ள டரியளாகி விட்டான். கூடவே ஒரு பெரிய மொருகலான வஞ்சிரம் வருவல்



கடைசில பய சர்வரை பார்த்து என்னைய விட்டுங்கனு கெஞ்ச ஆரம்பித்தான். ஆனாலும் சளைக்காம சிறு மண் பானையில் தயிரும் ஒரு கப் நிறைய கோதுமை ரவா பாயசம் வைத்தார்கள். கடைசியில் நான்தான் அதை முடிக்க வேண்டியதையாகிவட்டது.



கரண்டி ஆம்ளெட் மற்றும் கறி ஆம்ளெட் சிறு வெங்காயத்துடன் செய்திருந்தார்கள், இரண்டுமே அருமை. நண்டு மற்றும் இறால் தொக்கை தவிர அனைத்தும் தாருமாறு லெவல். ஆனால் ஒரு கட்டத்தில் பல வகை கொழம்பை சாப்பிட்டு நாக்கே மறத்துவிட்டது. அதனால் ரசத்தோடு முடிக்க நினைத்தேன். ஆனால் தயிர் வேறு வைத்ததால், அதை மட்டும் சாதமில்லாமல் சாப்பிட்டு முடித்தேன். பாயசம் வித்தியாசமாக இருந்தாலும் ரெண்டு ஸ்பூனுக்கு மேல சாப்பிட வயிற்றில் இடமில்லை.

நல்ல பசியோட போனால் செமயா விளையாடலாம். இல்லனா கொஞ்சம் காஸ்ட்டிலியா நினைக்க தோன்றும்.

கூகிள் வரைபடம்: